தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தேவையில்லை: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல். - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday 14 June 2017

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தேவையில்லை: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்.

தமிழகத்தில் போதுமான கல்வி வாய்ப்புகள் உள்ளதால், மத்திய அரசின் நவோதயா பள்ளிகள் தேவையில்லை என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.குமரி மகா சபை செயலர் ஜெயக்குமார் தாமஸ், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
மத்திய மற்றும் மாநில அரசின் பாடதிட்டங்களை பின்பற்றி தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா, சைனிக், மாநில அரசின் முப்பருவ கல்வி முறை அடிப்படையில் பல்வேறு பள்ளிகள் இயங்கி வருகின்றன. மத்திய அரசின் கல்வி திட்டத்திற்கும், மாநில அரசின் கல்வி திட்டத்திற்கும் வேறுபாடு உள்ளது. கல்விக்காக தனியார் பள்ளிகளில் அதிக அளவு பணம் செலவு செய்ய வேண்டியதுள்ளது.கிராமப்புற மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி வழங்க வேண்டும், என்ற நோக்கில் மத்திய அரசால் 1986 ஆம் ஆண்டு ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் தொடங்கப்பட்டன. உண்டு உறைவிட பள்ளியான நவோதயா பள்ளிகள் மத்திய மனித வள மேம்பாட்டு துறையின் கீழ் இயங்குகிறது. 6 முதல் பிளஸ் 2 வரை இரு பாலரும் படிக்கும் பள்ளியாக உள்ளது. குறைந்த கட்டணத்தில் கிராமப்புற மாணவர்கள் படிக்கும் வகையில் இப்பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளிகளில் மாநில மொழி, ஆங்கிலம், இந்தி கற்பிக்கப்படுகின்றன.ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இவ்வகை பள்ளிகளை தொடங்க மாநில அரசு போதிய இடங்களை கொடுக்க வேண்டும். ஆனால் மாநில அரசு இந்த பள்ளிகள் தொடங்க ஒத்துழைப்பு வழங்கவில்லை.எனவே தமிழகத்தில் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் துவங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த மனு நீதிபதிகள் ஏ. செல்வம், என். ஆதிநாதன் அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு வழக்கறிஞர்வாதிடும்போது, தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்க மத்திய அரசு தயாராக உள்ளது என்றார்.

தமிழக அரசு சார்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் கோவிந்தன் வாதிடும்போது, தமிழகத்தில் போதிய கல்வி வசதிகள் உள்ளன. மாநில பாடத்திட்டம், மத்திய பாடத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு பாடத்திட்டங்களை கற்பிக்கும் கல்வி நிறுவனங்கள் தமிழகத்தில் அதிகளவில் உள்ளன. இதனால் தமிழகத்துக்கு நவோதயா பள்ளிகள் தேவையில்லை. இது அரசின் கொள்கை முடிவாகும் என்றார்.அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தமிழகத்தில் அரசு பள்ளிகளின் நிலை என்ன? என கேள்வி எழுப்பினர். அதற்கு அரசு பள்ளிகள் சிறப்பாக இயங்கி வருகின்றன. பல பள்ளிகளில் போதிய அளவு குழந்தைகள் பயிலாவிட்டாலும் கூடுதல் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர் என்றார்.

மனுதாரர் வழக்கறிஞர் எஸ்.எம்.ஆனந்தமுருகன் வாதிடும்போது, மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மத்திய அரசு பணியாளர்களின் குழந்தைகளை மட்டுமே சேர்க்கின்றனர். இதனால் தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்க உத்தரவிட வேண்டும் என்றார். பின்னர் பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 20-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot