- Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Friday 16 June 2017

இப்படியும் சில மனிதர்கள்

இது உண்மையா ? நடக்குமா ? என்றால் உண்மைதான்,நடந்துள்ளது.
பள்ளியை பாராட்ட பல ஊர்களை தாண்டி  வந்த 13 பேர் கொண்ட குடும்பம்
தேவகோட்டை – சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெறும் பல்வேறு சமுதாய முன்னேற்றம் ஏற்படுத்த கூடிய கல்வி தொடர்பான  நிகழ்வுகளை ஊடகங்களில் படித்து பள்ளியை பாராட்ட விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள  சாலை மறைகுளம் ஊரிலிருந்து பல ஊர்களை தாண்டி ராமமூர்த்தி என்பார் குடும்பத்துடன் பள்ளிக்கே வருகை தந்து பாராட்டு தெரிவித்தார்.


                       இது தொடர்பாக விருதுநகர் மாவட்டம்  காரியாபட்டி சாலை மறைகுளம் கிராமத்தை சார்ந்த  ராமமூர்த்தி கூறியதாவது : கடந்த சில நாட்களுக்கு முன்பாக சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும்நடுநிலைப் பள்ளி  தொடர்பாக பத்திரிகையில் வெளியான கட்டுரைகள் படித்தேன்.இளம் வயது மாணவர்களை காவல் நிலையம்,வங்கி அஞ்சலகம்,அறிவியல் கல்லூரி,தோட்டக்கலை பண்ணை என அனைத்து வாழ்வியல் இடங்களுக்கும் களப்பயணம் அழைத்து சென்றதும் , ஒரு கல்வி ஆண்டில் 75 ஆளுமைகள் வந்து மாணவர்களிடம் கலந்துரையாடியதும் கண்டு வியந்து போனேன்.மேலும் சத்துணவில் புதிய முறையை கையாளுவது தொடர்பாகவும் படித்தேன்.இந்த பள்ளியை பார்த்து இதெல்லாம் எப்படி நடக்கிறது? இதற்கு யார் தூண்டுகோல் என்று நேரில் பார்த்து விட்டு,பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்களை பாராட்டி செல்ல எண்ணினேன்.
                                                    எங்கள் ஊரில் இருந்து காலை 8.30 மணிக்கெல்லாம் கிளம்பி சுமார் 150 கிலோமீட்டர் பயணம் செய்து  சுமார் 11.30 மணி அளவில் எங்கள் வாகனத்தில் என்னுடன் எனது மனைவி ,மகள் ,எனது உறவினர்கள் ஆக  பெரியவர்கள் ,பெண்கள் 7 பேரும் , சிறு குழந்தைகள் 6 பேருடன் பள்ளிக்கு சென்றோம்.பள்ளியில் தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் எங்கள் அனைவரையும் இன்முகத்துடன் வரவேற்றார்.எனக்கும்,அவருக்கும் முன் ,பின் தொடர்பு எதுவும் இல்லை.பத்திரிக்கை படித்ததன் வாயிலாக அவரை தொடர்பு கொண்டு கல்வி சார்ந்த சமுதாய முன்னேற்றம் தரகூடிய வகையில் செயல்படும் இப்பள்ளியை குடும்பத்துடன் வந்து பார்க்க எண்ணினேன்.என்னுடன் எனது மனைவி மலர் விழி,எனது மகள் பாலபாரதி,உறவினர்கள் மோகன் ராஜ்,விமலாதேவி,பிரசன்னகுமார்,மனோகரன்,குழந்தைகள் தன்ன குட்டி,கவின்,ரகுராம்,சாரு பிரீத்தி ஆகியோர் உடன் வந்தனர்.
                       நான் கல்லுரி படிப்பை முடித்து விட்டு எங்களது கிராமத்தில் முடங்கி கிடந்தபோது ,முதன் முதலாக அப்போது காரியாபட்டி பாண்டியன் கிராம வங்கியில் பணியாற்றிய போஸ் பாண்டியன் மற்றும் பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் துண்டுதலின் பேரில் தமிழக அரசின் அறிவொளி இயக்கத்தில் தீவிர பயிற்சி பெற்று  அதன் மூலமாகதான் பேச கூடிய வாய்ப்பை பெற்றேன்.அந்த உள் உணர்வின் வழியாகவே எனது வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வந்துள்ளேன்.20 ஆண்டுகளுக்கும் மேலாக கல்லூரி படிப்பு முடித்தாலும் செயலற்று இருந்த என்னை  எழுத்தாளர் பாரதி கிருஷ்ணகுமார் அறிவொளி இயக்கத்தின் வழியாக எனக்குள் ஆர்வத்தை  தூண்டும் வகையில் 1991 -1995 ஆண்டுகளில் தமிழக அரசின் அறிவொளி திட்டத்தின் வழியாக பயிற்சி பெற்றதன் விளைவாகவே இன்று அரசு பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் பணியில் உள்ளேன்.எனது மகள்களில் ஒருவர்  முதல் மதிப்பெண் பெற்று மருத்துவம் படிக்கிறார்.இன்னொருவர் ஆசிரியர் படிப்பு படித்து வருகிறார்.
                                     20 வருடங்களுக்கு பிறகு எனக்கு கிடைத்த துண்டுதலை இந்த பள்ளியில் இரண்டாம்,மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கல்வியோடு தானாக பேசும் கலையை  கொடுத்து வளர்த்து வருகிறார்கள். கண்டிப்பாக சுமார் பத்து வருடங்களுக்கு பிறகு இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மிக பெரிய ஆளுமைகளாக வருவார்கள்.நான் பெற்ற தூண்டுதலை மிக இளம் வயதில் இறையன்பு ஐ.எ.எஸ்.,நந்தகுமார் ஐ.ஆர்.எஸ்.போன்ற பல ஆளுமைகளை  இந்த மாணவர்கள் கிடைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளனர். மேலும் களபயணம் அழைத்து செல்வதால் மாணவர்கள் இளம் வயதில் மிக அதிகமான விசயங்களை தெரிந்து கொள்கின்றனர்.சத்துணவிலும் இப்பள்ளியில் பெற்றோரை இணைத்து  பல புதிய விசயங்களை அறிமுகபடுத்தி அனைத்து மாணவர்களும் சாப்பிடும் வண்ணம் ஏற்பாடு செய்து உள்ளனர். பெரிய வகுப்பு மாணவர்கள் இளம் வயது மாணவர்களை அன்புடன் அரவணைத்து உணவு ஊட்டி விடுவது பாரட்டுதலுக்கு உறியது. இந்த பள்ளி நிர்வாகத்துக்கும்,தலைமை ஆசிரியர்க்கும்,ஆசிரியர்களுக்கும் ,மாணவர்களுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறேன்.மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள்.இவ்வாறு கூறினார்.
                           இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் கூறியதாவது : சுமார் 150 கிலோமீட்டர் பயணம் செய்து விருதுநகர் மாவட்டத்தில் இருந்து இப்பள்ளிக்கு வாழ்த்து தெரிவிக்க வந்துள்ள ராமூர்த்தி குடும்பத்துக்கு நன்றி .இன்றைய காலகட்டத்தில் 6 குழந்தைகளையும் ,பெண்களையும் அழைத்து கொண்டு குடும்பத்துடன் ராமமூர்த்தி வந்தது மிக பெரிய செயல் ஆகும்.இன்று உள்ள பரபரப்பான சூழ்நிலையில் ஒரு நாள் முழுவதும் நேரத்தை பயன்படுத்தி இப்பள்ளிக்கு வந்து எங்களை பாராட்டியது எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது.இதன் மூலம் எங்களுக்கு அதிக உற்சாகம் கிடைத்துள்ளது.எங்களுக்கு இது வரை அறிமுகம் இல்லாத புதிய நபர்கள் பல ஊர்களை தாண்டி பத்திரிக்கை செய்தியை படித்து இப்பள்ளியை பாரட்ட வந்ததற்கு நன்றிகள் பல.இது போன்றும் மனிதர்கள் உள்ளனர் என்பதும், இது போன்று நடக்குமா,இது உண்மையா என்று என்னால் இன்னுமும் நம்ப நேரம் அதிகம் பிடித்தது.ஆனால் இது போன்று மனிதர்கள் உள்ளனர் என்பதும்,உண்மை நடக்கும் என்பதும் பாராட்டப்பட வேண்டியது.என்னிடம் ராமூர்த்தி அவர்கள் எவ்வாறு இந்த எண்ணம் உதித்தது? என்று பலமுறை கேட்டார்கள்.அப்துல்கலாம் அவர்கள் களப் பயணத்தின் வழியாகத்தான் பறவையை பார்த்து படித்து மிக பெரிய விஞ்ஞானியாக மாறியதற்கு துண்டுகோலாக இருந்தது என்று அவரது அக்னி சிறகுகள் புத்தகத்தில் படித்துள்ளேன். மேலும் நான் படித்த கல்லூரிகளில் இது போன்று அனுபவம் பெற்றது, ஜெ.சி.ஐ.என்கிற இளைஞர்களுக்கான சுய முன்னேற்ற அமைப்பின்  வழியாக பெற்ற பயிற்சியின் மூலமாக  இது போன்ற உள்ளுணர்வுகளை பெற்றேன் என்று தெரிவித்தேன்.இவ்வாறு தலைமை ஆசிரியர் கூறினார்.
                           ராமமூர்த்தி மாணவர்களிடம் பேசியதற்கு பிறகு மாணவர்கள் ராஜேஸ்வரி,வெங்கட்ராமன்,சின்னம்மாள்,ஜெனிபர்,ஈஸ்வரன் ஆகியோர் பேசிய தகல்வல்களை தொகுத்து கூறினார்கள்.இதனை பார்த்து ராமமூர்த்தியும் , உறவினர்களும் பெயர் சொல்லாமல் தானகவே மாணவர்கள் எழுந்து வந்து பேசிய தகவல்களை தொகுத்து சொல்வது தங்களுக்கு ஆச்சிரியமாக உள்ளது என்று பேசி கொண்டார்கள்.இது போன்று விதை தனது 20 வயதில் விதைக்க பட்டதன் விளைவாகவே இன்று தான் நல்ல நிலையில் உள்ளதாகவும் ராமமூர்த்தி தெரிவித்தார்.இந்த பள்ளியில் நல்ல விதைகளை அதிகமாக நல்ல முறையில் உருவாக்கி கொடுக்கின்றனர் என்று மீண்டும் பாராட்டினார்.கும்பத்துடன் வந்து ஒரு பாச நிகழ்வாகவே இந்த நிகழ்வு விடைபெறப்பட்டது.மாணவர்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் புதிய உற்சாகத்தை ஏற்படுத்தி கொடுத்தது.

பட விளக்கம் ; சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் நடைபெறும் பல்வேறு சமுதாய முன்னேற்றம் ஏற்படுத்த கூடிய கல்வி தொடர்பான  நிகழ்வுகளை ஊடகங்களில் படித்து பள்ளியை பாராட்ட விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள  சாலை மறைகுளம் ஊரிலிருந்து பல ஊர்களை தாண்டி ராமமூர்த்தி என்பார் குடும்பத்துடன் பள்ளிக்கே வருகை தந்து பாராட்டு தெரிவித்தார்.பள்ளி தலைமை ஆசிரியரும் உடன் உள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot