5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வா?- கனிமொழி கேள்விக்கு ஜவடேகர் பதில் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday 27 July 2017

5, 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வா?- கனிமொழி கேள்விக்கு ஜவடேகர் பதில்

5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்பது பள்ளிகளில் இடை நிறுத்தம் செய்யும் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது என்று ராஜ்யசபாவில் கனிமொழி எம்பி கூறியுள்ளார்.

இதற்கு பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு என்பது மாநில அரசுகளின் விருப்பத்துக்குட்பட்டது என்று கூறியுள்ளார்.

தற்போது, 1 முதல் 8ம் வகுப்புவரை அனைத்து மாணவர்களையும் கட்டாய தேர்ச்சி செய்யும் முறை அமலில் உள்ளது. இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகவும், 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்புகளுக்கு மட்டுமாவது பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்றும் 24 மாநிலங்கள், மத்திய அரசை வலியுறுத்தின.
இது குறித்து நேற்று ராஜ்யசபாவில் கேள்வி நேரத்தில் பேசிய திமுக எம்.பி கனிமொழி,
5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு என்பது பள்ளிகளில் இடை நிறுத்தம் செய்யும் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கும் அபாயம் இருக்கிறது. மேலும் கிராமப்புறங்களில் குறிப்பாக மாணவிகளை அரசின் இந்த முடிவு கடுமையாகப் பாதிக்கும். 5ஆம் வகுப்பு அல்லது 8ஆம் வகுப்பில் பெண் பிள்ளைகள் தேர்ச்சி பெறவில்லை என்றால் இதையே சாக்காக வைத்து பெண் பிள்ளைகளின் கல்வியை நிறுத்திவிட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
எனவே, தேசம் முழுவதும் இருக்கும் கிராமப்புறக் குறிப்பாக பெண் பிள்ளைகளின் கல்வியை மனதில்கொண்டு அரசின் இந்த முடிவினை மறு பரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று வலியுறுத்தினார்,
இதற்கு பதிலளித்த பிரகாஷ் ஜவடேகர், பெரும்பாலான மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும். இதற்கான மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
இந்த மத்திய அரசு மசோதாவை மாநிலங்கள் பின்பற்றுவது கட்டாயம் அல்ல. தேர்வை நடத்துவதா? வேண்டாமா? என்பதை மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம்.
இந்த தேர்வுகள், மார்ச் மாதம் நடத்தப்படும். அவற்றில் தேர்ச்சி பெறாதவர்கள், மே மாதம் மறுதேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும்.
அரசு பள்ளிகளில் கல்வித்தரம் தாழ்ந்து வருவது உண்மைதான். 4 வருடங்களுக்கு முன்பு, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் 4 சதவீதம் குறைந்தது. அதே சமயத்தில், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை விகிதம் 8 சதவீதம் அதிகரித்தது.
தனியார் பள்ளிகளில் படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவர்களை விட அரசு பள்ளிகளில் படிப்பை பாதியில் நிறுத்துவோர் எண்ணிக்கை இருமடங்கு அதிகம். அரசு பள்ளிகளில் படிப்பை பாதியில் நிறுத்துவதற்கான காரணத்தை கண்டறிய தனியாக எந்த ஆய்வும் நடத்த தேவையில்லை. அரசு பள்ளிகளில் கல்வித்தரத்தை மேம்படுத்துவது அவசியம். அதற்காக எண்ணற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு, சத்தீஸ்கார், மராட்டியம், உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில், படிப்பை பாதியில் நிறுத்துவதை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே சமயத்தில், அரசு பள்ளிகளை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறினார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot