சட்டசபை கூட்டத் தொடரில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு அறிவிப்பை வெளியிடுமா தமிழக அரசு - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday 3 January 2018

சட்டசபை கூட்டத் தொடரில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு அறிவிப்பை வெளியிடுமா தமிழக அரசு

தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களின் நிலை தள்ளாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணிநியமனம் செய்யப்பட்ட பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாத சம்பளம், ஆண்டுதோறும் ஊதிய உயர்வு,
போனஸ், பெண் ஆசிரியர்களுக்கு விடுமுறையுடன் கூடிய மகப்பேறு கால விடுப்பு, ஒன்றித்திற்குள் பணிமாறுதல், அனைத்து வேலைநாட்களிலும் முழுநேரப்பணி மற்றும் பணிநிரந்தரம் இல்லாததால் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

தமிழகம் முழுவதிலும்      அரசுப் பள்ளிகளில் ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் 16549 பகுதிநேர ஆசிரியர்களாக கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை, தையல், தோட்டக்கலை, வாழ்வியல் திறன்கல்வி மற்றும் கட்டிடக்கலைக்கல்வி உள்ளிட்ட பாடப்பிரிவுகளுக்கு பணிநியமனம் செய்யப்பட்டனர்.

வாரம் 3 அரைநாட்கள் வீதம் மாதத்திற்கு 12 அரைநாட்கள் பணி செய்ய உத்தரவிடப்பட்டது.

முதல் முறையாக கடந்த 2014ம் ஆண்டு ரூ.2 ஆயிரமும், இரண்டாவது முறையாக ரூ.700ம் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. இதனால் தற்போது ரூ.7 ஆயிரத்து எழுநூறு தொகுப்பூதியமாக வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 5 ஆண்டுகளில்      2 முறை மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டு உள்ளது. தற்போது 7வது ஊதியக்குழு அரசாணையிட்டும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு 30% ஊதிய உயர்வு இதுவரை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது. அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதுபோலவோ அல்லது தனியார் நிறுவனங்களில் வழங்கப்படுவதுபோலவோ பண்டிகை போனஸ், பணியின்போது இறந்தவர்களுக்கு இழப்பீடு, பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன்கள் போன்ற சலுகைகள் இவர்கள் தற்காலிக ஒப்பந்த பணியில் இருப்பதால் மறுக்கப்பட்டு வருகிறது. மேலும் பகுதிநேர பெண் ஆசிரியர்களுக்கு  சம்பளத்துடன் கூடிய மகப்பேறு கால விடுப்புகூட வழங்கப்படுவது இல்லை.

இவர்களை பணிநியமனம் செய்யப்படுவதற்கு முன்பாக கடந்த 26.08.2011ல் சட்டப்பேரவை விதி எண் 110ல் மறைந்த முதல்வர் அவர்களால் அறிவிக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுபடி  அனைத்து மாதங்களுக்கும் சம்பளம் வழங்கி இருக்கவேண்டும். ஆனால் ஆண்டிற்கு 11 மாதங்களுக்கு மட்டுமே ஊதியம் வழங்கப்பட்டுவருகிறது. இதனால் இந்த 6 ஆண்டுகளில் மே மாத சம்பளமாக ஒவ்வொருவரும் ரூ38 ஆயிரம் இழந்து வருகின்றனர்.

 பணிநியமன அரசாணை 177ல் காலிப்பணியிடங்களில் ஒரு பகுதிநேர ஆசிரியர் கூடுதலாக அதிகபட்சமாக 4 பள்ளிகள் பணிபுரிந்து, அதற்குரிய சம்பளத்தை அந்தந்த பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என ஆணையிடப்பட்டு இருந்தது. ஆனால் அரசாணை செயல்படுத்தவே இல்லை. அதைப்போலவே அடுத்த வெளியிடப்பட்ட அரசாணை 186லும் காலிப்பணியிடங்களில் ஒரு பகுதிநேர ஆசிரியர்  கூடுதலாக அதிகபட்சமாக 2 பள்ளிகள் பணிபுரிந்து, அதற்குரிய சம்பளத்தை அந்தந்த பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என ஆணையிடப்பட்டு இருந்தது. அதுவும் செயல்படுத்தபடவில்லை. இதெல்லாம் செயல்படுத்தி இருந்தால்கூட அனைவரும் அதிக சம்பளத்தை பெற்றதோடு, கிட்டதட்ட முழுநேர பணி செய்திருப்பர். ஆனால் பள்ளிகளில் எல்லா வகையிலும் முழுநேரமாக பயன்படுத்தப்படும் நிலையே பரவலாக கையாளப்பட்டு வருகிறது.

அதே சமயம், நியாயமான கோரிக்கைகளை அரசு நிறைவேற்றிட வேண்டி ஜாக்டோஜியோ கூட்டமைப்பினர்  பள்ளிகளை இழுத்துமூடி போராட்டம் நடத்தும்போதெல்லாம், பகுதிநேர ஆசிரியர்களை முழுநேரமாக பள்ளிகளை இயக்க அரசு உத்தரவிட்டு வருகிறது. இதற்கு தனியாக ஊதியம் எதுவும் வழங்கியதில்லை என்பதும் குறிப்பிடதக்கது.

எனவே, பகுதிநேர ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளான அனைத்து  வேலை நாட்களிலும் முழுநேரப்பணி, குறைந்தபட்சம் சிறப்பு காலமுறை ஊதியம் போன்றவற்றை இனிமேலாவது அரசு கவனத்தில் செலுத்தி நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

நவம்பர் 2ல் தற்போதைய முதல்வரை சந்தித்தபோது சிறப்பு காலமுறை ஊதியம் கேட்டு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த 6 ஆண்டுகளில் 8 கல்வி அமைச்சர்களையும், 3 முதல்வர்களையும் சந்தித்து கோரிக்கை மனு அளித்தும் இதுவரை முன்னேற்றம் எதுவும் இல்லாமல் எதிர்கால வாழ்க்கை குறித்து கவலையில் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.செந்தில்குமார் கூறுகையில், 2012ல் பணி அமர்த்தபடும்போது 16549 பகுதிநேர ஆசிரியர்கள் இருந்தனர். ஆனால் நவம்பர் 2014ல் அரசாணை வெளியிடப்பட்டபோது 15169 பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிவதாக கணக்கீடு சொல்லப்பட்டு 1380 காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்பட்டது. தற்போது காலிப்பணியிட எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. சம்பள உயர்வுக்கு இந்த நிதியை வழங்கலாம் அல்லது கூடுதலாக பள்ளிகளை அனைவருக்கும் வழங்கலாம். எனவே அரசு இதனை கருத்தில் கொள்ளவேண்டும். 5 ஆண்டுகள் முடிவடைந்தும் இதுவரை ஆண்டுதோறும் ஊதிய உயர்வுகூட சரிவர வழங்கப்படாதது வருத்தமளிக்கிறது. ஒப்பந்த பணியாளர்களுக்கும் சமவேலை சமஊதியம் வழங்கவேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.எஸ்.ஹெகர் மற்றும் எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் வழங்கிய தீர்ப்பை அமுல்படுத்தி பகுதிநேர ஆசிரியர்களைப்போல உள்ள அனைத்து ஒப்பந்த பணியில் உள்ளவர்களுக்கும் அரசு சலுகைகளை கிடைக்க வழிவகை செய்ய அரசு முன்வரவேண்டும்.

சட்டப்படி ஒப்பந்த பணியாளர்களுக்கு தரப்படும் EPF, ESI, போனஸ், குறைந்தபட்ச ஊதியம் போன்ற அடிப்படை விதிகளை பகுதிநேர ஆசிரியர்களுக்கும் வழங்கி இருக்க வேண்டும். ஆனால் அரசு செய்யவில்லை. இருந்தாலும், என்றாவது ஒருநாள் பணிநிரந்தரம் செய்யப்படுவோம் என்று நம்பிக்கை வைத்திருப்பதால் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில்கொண்டு செவ்வனே அறப்பணிசெய்து வருகின்றனர். தமக்கு பாடம் நடத்தும் ஆசிரியருக்கே பகுதிநேரம்தான் வேலையா என மாணவர்களே கவலை தெரிவித்து வருகின்றனர். படிப்படியாக பணிநிரந்தரம் செய்திருந்தால்கூட இந்த 6 வருஷத்தில கிட்டதட்ட அனைவருமே நிரந்தரம் செய்யப்பட்டிருப்பர். தமிழக அரசே இந்த திட்ட வேலையில் இவ்வளவுபேரை ஒப்பந்த தொகுப்பூதிய பகுதிநேர வேலையில் அமர்த்தியது. எனவே அரசின் கொள்கை முடிவினை எங்களின் வாழ்வாதாரம் கருதி மனிதநேயத்துடன் பணிநிரந்தர அறிவிப்பை இந்த சட்டசபை கூட்டத்தொடரிலாவது அரசு அறிவிக்க வேண்டும் என்றார். மேலும், கடந்த ஜீன், ஜீலை மாதங்களில் நடைபெற்ற கல்வி மானிய கோரிக்கையின்போது திமுக உறுப்பினர்களின் கேள்விக்கு“பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்ய அரசு பரிசீலித்து வருகிறது, பணிநிரந்தரம் செய்ய விரைவில் கமிட்டி அமைக்கப்படும்” என பள்ளிக்கல்வி அமைச்சர் பதிலளித்து சொன்னபடி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

இவண்,

சி.செந்தில்குமார்

மாநில ஒருங்கிணைப்பாளர்,

தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு

செல் நம்பர் : 9487257203

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot