ஜாக்டோ - ஜியோவுடன் பேச முதல்வர் மறுப்பு பேரவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday 12 June 2018

ஜாக்டோ - ஜியோவுடன் பேச முதல்வர் மறுப்பு பேரவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை அழைத்து பேச முதல்வர் மறுத்து விட்டதால் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
அவர்களை தொடர்ந்து காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்களுக்கும் வெளிநடப்பு செய்தனர்.தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அமைப்புகளை உள்ளடக்கிய கூட்டமைப்பு ஜாக்டோ-ஜியோ. அந்த அமைப்பினர் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். 3 லட்சத்து 75 ஆயிரம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் இருக்கின்ற நேரத்தில், மேலும் பணியாளரை குறைக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆதிசேஷய்யா தலைமையில் போடப்பட்டுள்ள குழுவை கலைக்க வேண்டும் என்றும், பள்ளி கல்வித்துறை வெளியிட்டு உள்ள அரசாணைகள் 100 மற்றும் 101 மூலமாக ஒழிக்கப்பட்டுள்ள ஆசிரியர் பணியிடங்களை திரும்பவும் உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.போராட்டத்திலே ஈடுபட்டிருக்கும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை உடனடியாக அழைத்து  பேச வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராமசாமி: போராட்டத்தை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும். அழைத்து பேசி நல்ல முடிவை அறிவிக்க வேண்டும்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏ அபுபக்கர்: முதல்வர் இவர்களின் நியாயமான கோரிக்கை நிறைவேற்ற வேண்டும்.துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: சில ஆண்டுகளாக, உலக அளவில் பொருளாதார தேக்க நிலை ஏற்பட்டு, மாநில அரசின் வரி வருவாயின் வளர்ச்சி வெகுவாக குறைந்துள்ள போதிலும், அரசு அலுவலர்களும், ஆசிரியர்களும் துடிப்புடன் இயங்க வேண்டும் என்பதால்தான், அகவிலைப்படி உயர்வு உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர, பெண் அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு காலம், 6 மாதத்திலிருந்து 9 மாதங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது. வீட்டு வசதி கடன் அளவு உயர்த்தப்பட்டுள்ளது. இப்படி மொத்த வரி வருவாயில் சுமார் 70 சதவீதம் இவ்வாறு செலவு செய்யப்படுகிறது. அரசு வழங்கியுள்ள சம்பள உயர்வையும், பிற சலுகைகளையும் கருத்தில் கொண்டு, மக்களின் நலன் கருதி அரசு ஊழியர்கள் சிறப்பாக செயல்பட்டு, பொறுப்புணர்வோடு கடமை ஆற்றுவார்கள் என உறுதியாக
நம்புகிறேன்.

மு.க.ஸ்டாலின்: அவர்கள் சொன்னது எங்களை முதல்வர், அரசு அழைத்து பேச வேண்டும் என்பதுதான். ஆகவே நீங்கள் தயவு கூர்ந்து அவர்களை அழைத்து பேச
வேண்டும்.ஓ.பன்னீர்செல்வம்: எதிர்க்கட்சி தலைவர், இன்றைக்கு இருக்கின்ற அரசு ெசய்யாது. நாங்கள் ஆட்சிக்கு வந்த பிறகுதான் அதை செய்வோம் என்று சொல்லி, அவர்களை தூண்டிவிடுகின்ற வகையில் பேசிவிட்டு வந்திருக்கிறார்.

மு.க.ஸ்டாலின்: நான் தூண்டிவிட்டு வந்ததாக சொல்கிறார். அந்த பொருள்பட அவர் நினைப்பார் என்று சொன்னால், நாங்களும் அவர்கள் சொன்ன கோரிக்கைகளை நிறைவேற்றுகிறோம் என்று நீங்கள் சொன்னால் நாங்கள் தூண்டிவிட வேண்டிய அவசியமே வந்திருக்காது. நீங்கள் அழைத்து பேசாத காரணத்தால் இதை கண்டித்து நாங்கள் திமுக சார்பில் எங்களுடைய கண்டனத்தை தெரிவிக்கக்கூடிய வகையிலே வெளிநடப்பு செய்கிறோம்.இதைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு தெரிவித்தனர். அவர்களுடன் காங்கிரஸ் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்எல்ஏக்களும் வெளிநடப்பு செய்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து அனைவரும் மீண்டும் அவை நடவடிக்கையில் கலந்து கொண்டனர்.

முதல்வர் விளக்கம் தூத்துக்குடியில் போராட்டம் நடத்தியவர்களுடன் அரசு பேசாததால் ஏற்பட்ட நிலைபோல ஆகிவிடக் கூடாது என்றார் மு.க.ஸ்டாலின். இதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அளித்த விளக்கம்:  ஜாக்டோ-ஜியோ அமைப்பை அழைத்து பேச வேண்டும் என்று இங்கே தெரிவித்தார்கள். அதற்கு துணை முதல்வர் விளக்கமாக, தெளிவாக அரசு எடுத்த நடவடிக்கையை தெளிவுபடுத்தி இருக்கிறார். இதற்கு குழு அமைக்கப்படுகின்றது. அந்த குழு அறிக்கை தாக்கல் செய்த பிறகுதான், அதில் எதை எதை நிறைவேற்ற முடியுமோ, அதை அதை அரசால் நிறைவேற்றப்படும் என்பதை தெளிவாக சொல்லியிருக்கின்றார். அதுமட்டுமல்ல, தூத்துக்குடி சம்பவத்தை பற்றி  சொன்னார்கள். ஏற்கனவே தூத்துக்குடியிலே 14 முறை மாவட்ட ஆட்சி தலைவரும், சார் ஆட்சியரும் அழைத்து பேசியிருக்கின்றார்கள். பேசவில்லை என்று சொல்வது தவறு.

பேரவையில் கடும் அமளி விஜயதரணி வெளியேற்றம் சட்டப்பேரவையில் நேற்று காங்கிரஸ் எம்எல்ஏ விஜயதரணி சபாநாயகரிடம் பேச அனுமதி கேட்டார். அவர் அனுமதி அளிக்கவில்லை. தொடர்ந்து எழுந்து நின்று சபாநாயகரிடம் தன்னை பேச அனுமதிக்க வேண்டும் என்று நீண்ட நேரம் விஜயதரணி கோரிக்கை வைத்தார்.

சபாநாயகர் தனபால்: அவைக்கு நீங்கள் கட்டுப்பட மறுக்கிறீர்கள், இதுபோன்று செயல்பட்டால் நடவடிக்கை எடுக்க வேண்டியிருக்கும் என்று எச்சரிக்கை செய்தார்.

விஜயதரணி: `நடவடிக்கை எடுங்கள்’’ என்று ெதாடர்ந்து கூறினார்.இதையடுத்து விஜயதரணியை வெளியேற்றும்படி அவை காவலர்களுக்கு உத்தரவிட்டார். பெண் காவலர்கள் அவரை வெளியேற்ற முயற்சி செய்தனர். ஆனால் வெளியேறாமல் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தார். நீண்ட போராட்டத்துக்குப் பிறகு அவை காவலர்கள் விஜயதரணியை வெளியேற்றினர்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot