ஜாக்டோ-ஜியோ சங்கத்தினருடன் நடத்திய தமிழக அரசின் பேச்சு தோல்வி: வரும் 4ம் தேதி திட்டமிட்டபடி ஸ்டிரைக் நடத்த ஊழியர்கள் தீவிரம் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Friday 30 November 2018

ஜாக்டோ-ஜியோ சங்கத்தினருடன் நடத்திய தமிழக அரசின் பேச்சு தோல்வி: வரும் 4ம் தேதி திட்டமிட்டபடி ஸ்டிரைக் நடத்த ஊழியர்கள் தீவிரம்


ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 4ம் தேதி முதல் வேலை நிறுத்தப்போராட்டம் அறிவித்துள்ள நிலையில், அச்சங்கத்தின் நிர்வாகிகளுடன் தமிழக அரசு நேற்று தலைமைச் செயலகத்தில் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்களுக்கான ஓய்வூதியம், சம்பள முரண்பாடு களைதல் உள்பட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தனித்தனியாக போராடி வந்த இவர்கள், ஒரே அமைப்பின் கீழ், ஜாக்டோ-ஜியோ என்று இணைந்து போராடி வருகின்றனர். ஆனாலும், அரசு இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தி வருகிறது.

 வரும் 4ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடக்கும் என ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் அறிவித்தனர். இந்த போராட்டத்தை முடக்க அரசு பல முயற்சிகளை செய்து வருகிறது. போராட்டம் நடைபெற இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த சாத்தியமா? என்று விசாரிக்க நியமிக்கப்பட்ட ஒரு நபர் குழு தனது பரிந்துரையை அரசிடம் சமர்ப்பித்துள்ளது.  மேலும், அரசுக்கு ஆதரவாக செயல்படும் தமிழ்நாடு தலைமை செயலக சங்கம், என்ஜிஓ, அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு துறை ஊர்தி ஓட்டுனர் சங்க தலைவர் மற்றும் நிர்வாகிகளை தமிழக பணியாளர் மற்றும் சீர்திருத்த துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று முன்தினம் அழைத்து பேசினார்.

பேச்சுவார்த்தை முடிவில் இந்த 4 சங்கங்களும், டிசம்பர் 4ம் தேதி நடைபெறும் தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என்று அறிவித்தனர். ஆனால், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர் வருகிற 4ம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடத்துவதில் உறுதியாக உள்ளனர். இதைத் தொடர்ந்து ஜாக்டோ-ஜியோ அமைப்புடனும் பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு முன் வந்து அழைப்பு விடுத்தது. அரசின் அழைப்பை ஏற்று, நேற்று மதியம் 2 மணி அளவில் சென்னை, தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது.

இந்த பேச்சுவார்த்தையில், அரசு சார்பில் அமைச்சர்கள் ஜெயக்குமார், நிதித்துறை செயலாளர் சண்முகம், பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை செயலாளர் சுவர்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் பல்வேறு சங்க நிர்வாகிகள் 20 பேர் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தை சுமார் இரண்டரை மணி நேரம் நடைபெற்றது. தமிழக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை முடிந்ததும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் நிருபர்களிடம் கூறியதாவது:

அமைச்சர், ஏதாவது ஒரு உறுதிமொழியாவது ருவார் என்று எதிர்பார்த்தோம். எந்த உறுதிமொழியும் அவர் தரவில்லை. நீங்கள் பேசியதையெல்லாம் முதல்வரிடம் சென்று நான் விவரிக்கிறேன் என்றுதான் சொல்லி இருக்கிறார்.  நாளையதினம் சென்னையில் ஜாக்டோ-ஜியோ உயர்மட்ட குழு கூட்டம் இருக்கிறது. அந்த கூட்டத்திற்கு எல்லோரும் மிகவும் வேகத்தோடு வருகிறார்கள். அவர்கள் போராட்டத்தை நிறுத்துவதற்கு ஒத்துக்கொள்ள மாட்டார்கள். ஆகவே, மீண்டும் மீண்டும் அமைச்சரிடம் வற்புறுத்தி சொல்லியும்கூட எந்த வாக்குறுதியும் தரவில்லை.

எங்களுடைய உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் இந்த அரசு புரிந்துகொண்டதாக தெரியவில்லை. எங்கள் கோரிக்கை மீது அரசு எந்த ஒரு முடிவையும் அறிவிக்கவில்லை. எல்லாவற்றையும் முதல்வரிடம் தெரிவிக்கிறோம் என்றுதான் சொல்லி இருக்கிறார்கள். எனவே எங்களது நியாயமான கோரிக்கைகள் எதையும் இந்த அரசாங்கம் ஏற்றுக்கொண்டதாக தெரியவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். திட்டமிட்டபடி 4 ம் தேதி ஸ்டிரைக் செய்ய அரசு ஊழியர்கள்,  ஆசிரியர்கள் தீவிரமாக உள்ளனர்.

கோரிக்கைகள் என்னென்ன?
* புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத்தை கொண்டு வர வேண்டும்.
* இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.
* அரசு அறிவித்த ஊதிய உயர்வுக்கு பிறகு, 21 மாத நிலுவை தொகையை வழங்க வேண்டும்.
* சத்துணவு பணியாளர் உள்ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
* எதிர்கால இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை மறுக்கின்ற அரசாணை 56ஐ ரத்து செய்ய வேண்டும்.
* 2003-04ம் ஆண்டில் தொகுப்பு ஊதியத்தின் கீழ் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
* மாணவர்கள் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு அரசு பள்ளிகளை மூடக்கூடாது.

3 comments:

  1. ஆசிரியர்களின் வாழ்கை போராட்டமானவையாகவே உள்ளது
    எல்லாமே நியாயமான தேவைகளே

    ReplyDelete
  2. நல்ல கோரிக்கைகள்தான்..

    ReplyDelete

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot