தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவர்களை வெளியேற்றிவிட்டு பள்ளி கட்டிடத்தை அதிகாரிகள் இடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த கொள்ளுமேடு கடைவீதியில் கடந்த 2016 செப்டம்பர் மாதம் நீர்நிலைகள் அருகே அரசுக்கு சொந்தமான இடத்தில் இருந்த 13 ஆக்கிரமிப்பு கடைகள் இடிக்கப்பட்டன.
இந்த நிலையில், நீர்நிலை பகுதிகளில் அரசு உதவிபெறும் முஸ்லிம் உயர்நிலைப்பள்ளி கடந்த 70 வருடத்திற்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வந்தனர். அப்பள்ளியின் ஒருபகுதி அரசு நிலத்தில், அதாவது நீர்நிலை அருகில் இருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவுபடி நேற்று காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் சிவகாமசுந்தரி முன்னிலையில், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் சேத்தியாத்தோப்பு சரக காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜவஹர்லால் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்று பள்ளி கட்டிட ஆக்கிரமிப்புக்குள்ளான பகுதியை இடிக்க பொக்லைன் இயந்திரத்துடன் வந்தனர். அப்போது பள்ளியில் ேதர்வு நடந்து கொண்டிருந்தது.
இதையடுத்து கட்டிடத்தை இடிப்பதற்கு முன்பாக கொட்டும் மழையென்றும் பாராமல் மாணவ, மாணவிகளை அவசர அவசரமாக வெளியேற்றிவிட்டு பின்னர் பொக்லைன் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடம் இடிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட பள்ளி அதே இடத்தில் இயங்குமா? அல்லது வேறு இடத்திற்கு மாற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
தற்போது பருவமழை துவங்கியுள்ள காரணத்தால் அப்பள்ளி மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகியுள்ளது.மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகமும், கல்வித்துறையும் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment