உலக இந்திய கருத்தரங்கில், இந்தியாவின் தேசிய உணவாக கிச்சடியை விளம்பரப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் ஒவ்வொரு மாநில மக்களும் ஒவ்வொரு விதமான உணவை சாப்பிட்டாலும், இந்தியா முழுவதுமே கிச்சடி பலராலும் விரும்பி சாப்பிடும் உணவாக இருப்பதால், உலக அளவில் பிராண்ட் இந்தியா உணவாக கிச்சடியை விளம்பரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
நவம்பர் 3ம் தேதி வெள்ளிக்கிழமை புது தில்லியில் உலக உணவு கருத்தரங்கு விழா தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது. இந்திய உணவுத் துறையும், சிஐஐயும் இணைந்து நடத்தும் இந்த கருத்தரங்கில், நவம்பர் 4ம் தேதி மாலை, உலக சாதனை படைக்கும் வகையில் மிகப்பெரிய அளவில் கிச்சடியை சமைத்துப் பரிமாற திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக பிரபல சமையல் கலைஞர் சஞ்சீவ் கபூர் அழைக்கப்பட்டுள்ளார். நிகழ்ச்சியில் மிகப்பெரிய பாத்திரத்தில் 800 கிலோ கிச்சடியை சமைத்து பரிமாற திட்டமிட்டுள்ளனர். இதற்காக 7 அடி சுற்றளவும் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பாத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தேசிய உணவாக அறிவித்து, உலகம் முழுவதும் கிச்சடி கிடைக்கும் வகையில் முயற்சிகள் எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கௌர் பாதல் தெரிவித்துள்ளார்.
உலக சாதனைகக்காக விருந்தினர்கள் முன்னிலையில் சமைக்கப்படும் கிச்சடி, கருத்தரங்கில் பங்கேற்பவர்களுக்கும், ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
கிச்சடி என்பதை, வெஜிடபிள் உப்புமா, சூஜி கிச்சடி என பல பெயர்களில் பல்வேறு மாநில மக்களும் சாப்பிடுவதோடு, இது உடலுக்கு மிக நன்மை அளிக்கும் காய்கறிகளின் கலவையுடன் சமைக்கப்படுவதாகும். எனவே இதனை இந்திய உணவாக மத்திய அரசு தேர்வு செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.