குரூப் 4 பதவிக்கு நாளை எழுத்து தேர்வு : 9351 இடங்களுக்கு 20.69 லட்சம் பேர் போட்டி - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Friday 9 February 2018

குரூப் 4 பதவிக்கு நாளை எழுத்து தேர்வு : 9351 இடங்களுக்கு 20.69 லட்சம் பேர் போட்டி

குரூப் 4 பதவியில் 9351 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு நாளை நடக்கிறது. இத்தேர்வை 20.69 லட்சம் பேர் எழுதுகின்றனர்.
தேர்வு கண்காணிப்பு பணியில் 1.25 லட்சம் அரசு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இத்தேர்வில் முதல் முறையாக தேர்வு எழுதுபவர்களின் புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள் அறிமுகப்படுத்தப்படுகிறது.டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பதவியில் அடங்கிய கிராம நிர்வாக அலுவலர்(விஏஓ)- 494 காலி பணியிடம், இளநிலை உதவியாளர்(பிணையமற்றது)-4096, இளநிலை உதவியாளர்(பிணையம்)-205, வரிதண்டலர்(கிரேடு 1)-48, நில அளவர்- 74. வரைவாளர் 156, தட்டச்சர்-3463, சுருக்கெழுத்து தட்டச்சர்(கிரேடு 3)- 815 உள்ளிட்ட 9351 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த நவம்பர் 14ம் தேதி வெளியிட்டது.
இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இளநிலை, முதுநிலை பட்டதாரிகள் என்று சுமார்  20 லட்சத்து 83 ஆயிரத்து 152 பேர் விண்ணப்பித்தனர்.

இதில் 20 லட்சத்து 69 ஆயிரத்து 274 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதில் ஆண் தேர்வர்கள் 9,41,878 பேர், பெண் தேர்வர்கள் 11,27,342, மூன்றாம் பாலினத்தவர் 54 பேர், மாற்றுத்திறனாளிகள் 25,906 பேர், ஆதரவற்ற விதவைகள் 7367 பேர், முன்னாள் படைவீரர்கள் 4107 பேர் அடங்குவர்.

இந்த நிலையில் குரூப் 4 பதவிக்கான எழுத்து ேதர்வு நாளை நடக்கிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் தேர்வு பிற்பகல் 1 மணி வரை நடக்கிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 301 தாலுகா மையங்களில் 6962 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வு பணியில் 1.25 லட்சம் ஆசிரியர்கள், அரசு பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அதாவது தேர்வை கண்காணிக்க முதன்மை கண்காணிப்பாளர்கள் 6962 பேர், தேர்வுக்கூட கண்காணிப்பாளர்கள் 1,03,500 பேர், தேர்வுக்கூட ஆய்வாளர்கள் 6962 பேர் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். தேர்வை கண்காணிக்க 1165 மொபைல் யூனிட்(நகரும் குழுக்கள்) அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குழுவிலும் 5 பேர் இடம் பெற்றுள்ளனர்.

அது மட்டுமல்லாமல் 685 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் வருவாய் கோட்ட அலுவலர், துணை  ஆட்சியர் நிலையிலான அலுவலர்கள் இடம் பெற்றுள்ளனர். 170 தேர்வு மையங்கள் இணையவழி மூலமாக கண்காணிக்கப்பட உள்ளது. மேலும் அனைத்துத் தேர்வுக்கூடங்களின் தேர்வு நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட உள்ளது.
இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் இரா.சுதன் வெளியிட்ட அறிக்கை:

டிஎன்பிஎஸ்சி வரலாற்றிலேயே இதர பிற தேர்வாணையம், தேர்வு அமைப்புகளை  ஒப்பிடும்போது மிக அதிக அளவான 20.7 லட்சம் விண்ணப்பதாரர்கள் ஒரே நேரத்தில்  தேர்வில் பங்கேற்கின்றனர். இதில் 1.25 லட்சம் ஆசிரியர்கள், அரசுப்பணியாளர்கள் பங்களிப்பில் இத்தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வில் தேர்வர்களின் பெயர், புகைப்படம், பதிவெண், விருப்பப்பாடம் மற்றும் தேர்வுக்கூடத்தின் பெயர் ஆகிய தனிப்பட்ட விவரங்கள் அச்சடிக்கப்பட்டுள்ள தனித்துவ விடைத்தாட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் தவறாக பதிவெண்ணைக் குறிப்பிடும் தேர்வர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த மதிப்பெண் குறைப்பு நடவடிக்கையில் இருந்து விடுவிக்கப்படுவதுடன், இதனால் தேர்வு முடிவுகள் வெளியிடத் தேவையான கால அவகாசம் கணிசமான அளவில் குறையும். தேர்வர்கள் வினாத்தாளில் விடையினை குறித்தல் தடைசெய்யப்பட்டுள்ளது. தேர்வுத்தாளில் விடையளிக்காமல் விடப்பட்டுள்ள கட்டங்களின் எண்ணிக்கையை கணக்கிட்டு குறிப்பிடும் வகையில் புதிதாக ஒரு கலம் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் பொருட்டு தேர்வு நேரத்திற்குப் பிறகு ஐந்து நிமிட கூடுதல் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

ஹால் டிக்கெட் கட்டாயம் : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தேர்வு எழுதுபவர்கள் பேஜர், மொைபல் போன், கால்குலேட்டர், நினைவகக் குறிப்பு (மெமரி நோட்ஸ்), புத்தகம், மின்னணு சாதனம், பதிவு செய்யும் உபகரணம்  ஆகியவற்றை தனி சாதனமாகவோ அல்லது கைக்கடிகாரம், மோதிரம் போன்றவற்றின் ஒரு பகுதியாகவோ தேர்வுக்கூடத்திற்கு கொண்டு செல்லக்கூடாது. தேர்வுக்கூட நுழைவுச்சீட்டில்லாமல் வரும் விண்ணப்பதாரர் கண்டிப்பாகத் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று டிஎன்பிஎஸ்சி எச்சரித்துள்ளது.

சென்னையில் 1.60 லட்சம் பேர்;

சென்னையில் மட்டும் குரூப் 4 தேர்வை 1,60,120 பேர் எழுதுகின்றனர். இதற்காக 508 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு பஸ்கள் இயக்கம்:

குரூப்4 தேர்வு கூடங்களுக்கு தேர்வு எழுதுபவர்கள் எளிதில் சென்றுவர காலை 8 மணிமுதல் மாலை 3 வரை கூடுதல் சிறப்புப் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்வு நேரத்தில் தடையில்லா  மின்சாரம் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot