முதுநிலை மருத்துவப் படிப்புக்கான அரசாணை, தகுதிப் பட்டியல் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Friday 16 June 2017

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான அரசாணை, தகுதிப் பட்டியல் ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் கடந்த மே மாதம் நடத்தப்பட்ட முதுநிலை மருத்துவ படிப்பிற்கான அரசாணை மற்றும் தகுதிப் பட்டியலை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் ராஜிவ் ஷக்தேர் மற்றும் ஆர்.சுரேஷ்குமார் வெள்ளிக்கிழமை பிறப்பித்த உத்தரவு விவரம் வருமாறு:
தகுதியில்லாத அரசு டாக்டர்களுக்கும் தமிழக அரசு சலுகை மதிப்பெண் வழங்கியுள்ளது. தமிழக அரசு மனதை ஒருமுகப்படுத்தி இந்த வரையறையை செய்யவில்லை என்பது அப்பட்டமாக தெரிகிறது. எனவே இதுதொடர்பாக தமிழக அரசு கடந்த மே 6-ம் தேதி வெளியிட்ட அரசாணையை ரத்து செய்கிறோம். அந்த அரசாணையைப் பின்பற்றி கடந்த மே 7-ம் தேதி வெளியிடப்பட்ட மாணவர் சேர்க்கை தொடர்பான தகுதிப்பட்டியலும் முழுக்க முழுக்கத் தவறானது என்பதால்அதையும் ரத்து செய்கிறோம். இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 3 நாட்களில் தமிழக அரசு மீண்டும் புதிய தகுதிப்பட்டியலை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.மருத்துவ பட்ட மேற்படிப்புக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவால் மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கு மீண்டும் கவுன்சிலிங் நடத்தப்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.முன்னதாக, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அரசு டாக்டர் ராஜேஸ் வில்சன் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்யநாராயணா தமிழகத்தில் மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர் சேர்க்கையை இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளைப் பின்பற்றி நடத்த வேண்டும். மேலும் இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட விளக்கக் குறிப்பேடு செல்லாது என கடந்த மார்ச் 19-ம் தேதி உத்தரவிட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து அரசு டாக்டர்களான எஸ்.ப்ரீத்தீஸ்வரி, பி.திருநாவுக்கரசு உள்ளிட்ட பலர் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை கூறியதால், இந்த வழக்கை விசாரித்த மூன்றாவது நீதிபதியான எம்.சத்யநாராயணன், 'இந்த மருத்துவ மாணவர் சேர்க்கையை இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளைப் பின்பற்றித்தான் நடத்த வேண்டும். ஆனால் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு சலுகை வழங்க ஏதுவாக மலைப்பகுதி, தொலைதூரம், குக்கிராமம் என்பதை தமிழக அரசே வரையறை செய்து கொள்ளலாம்' எனவும் தீர்ப்பளித்தார்.இந்நிலையில் தமிழக அரசு இதுதொடர்பாக கடந்த மே 6-ம் தேதி புதிய அரசாணை வெளியிட்டு, அதன் அடிப்படையில் மே 7-ம் தேதி மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான தகுதிப்பட்டியலையும் வெளியிட்டது. மே 8-ம் தேதி முதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு மாணவர் சேர்க்கை நடத்தி முடிக்கப்பட்டது.

இந்நிலையில் விழுப்புரத்தைச் சேர்ந்த டாக்டர் ப்ரணிதா உள்ளிட்ட பலர் இந்த கலந்தாய்வு மற்றும் அரசாணையை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'முதுநிலை பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கையின் போது எளிதில் செல்ல முடியாத கடினமான பகுதி, தொலைதூரப் பகுதி மற்றும் மலைப்பகுதிகளில் பணிபுரியும் அரசு டாக்டர்களுக்கு மட்டுமே சலுகை மதிப்பெண் வழங்க இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளில் உள்ளது. ஆனால் தமிழக அரசு இந்த வரையறைக்குள் கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களையும் கொண்டு வந்து, அங்கு பணிபுரியும் அரசு டாக்டர்களுக்கும் சலுகை வழங்க ஏதுவாக கடந்த மே 6-ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளது.இதனால் மொத்தம் உள்ள ஆயிரத்து 66 இடங்களில் 999 இடங்கள் அரசு டாக்டர்களுக்கே ஒதுக்கப்பட்டுள்ளது. இது இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளுக்கு எதிரானது. எனவே அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும். மேலும் மே 7-ம் தேதி வெளியிடப்பட்ட தகுதிப்பட்டியலை ரத்து செய்ய வேண்டும்' என அதில் கோரியிருந்தனர்.

இந்த சூழலில் இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடந்த மே மாதம் நடத்தப்பட்ட முதுநிலை மருத்துவ மேற்படிப்பிற்கான அரசாணை மற்றும் தகுதிப் பட்டியலை ரத்து செய்வதாகவும், 3 நாட்களில் தமிழக அரசு மீண்டும் புதிய தகுதிப்பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot